Thursday, January 7, 2021

அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்



பெருமதிப்புடையீர், வணக்கம்  🙏

நாங்கள்  காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறியபடி சிதலமடைந்துள்ள கோவில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம்.

இதுவரை கீழ்கண்ட 14 பழமையான சிவாலயத்தை புனரவர்தனம் செய்துள்ளோம். 

  1. மூக்கனூர் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது). சுமார் ஆயிரம் வருடம் தொன்மை வாய்ந்த இந்த சிவாலயம் முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டவர்கள் வனவாச காலத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத தாண்டவநேஸ்வரரை பூஜித்து மன அமைதி பெற்றதாக வரலாறு கூறுகிறது. 
  2. மண்ணூர் (பூந்தமல்லியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது)
  3. நெமிலி (ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது)
  4. பாக்கம் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது)
  5. கண்ணூர்-அரைவாக்கம் (சுங்குவார்சத்திரம்-மப்பேடு செல்லும் சாலையில் உள்ளது)
  6. அருள்மிகு அபிதகுசாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், வெண்மணி-போளூர் அருகில் உள்ளது.
  7. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருகோயில், சேஷமூலை - திருநள்ளாறு அருகில்.
  8. அருள்மிகு மாகளநாதர், அம்பர் மாகாளம் - காரைக்கால் அருகில் உள்ளது. (கும்பாபிஷேகம்-யாகசாலை)
  9. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர், மணவூர் - சென்னை - அரக்கோணம் மார்கத்தில் உள்ளது.
  10. அருள்மிகு பாலாம்பிகை சமேத மிருத்யுஞ்சயர் திருக்கோவில், ஏலம்பக்கம்.
  11. மீண்டும் அருள்மிகு தாண்டவனேஸ்வர் திருக்கோயில், முக்கனுர்.
  12. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்(யாக சாலையின் ஒரு பகுதி), திருவண்ணாமலை.
  13. அருள்மிகு அதிகாமாட்சி அம்பாள் சமேத கற்கடேஸ்வரர் ஆலயம், மணவூர்.
  14. அருள்மிகு ஸ்ரீமனோன்மணி சமேத மஹாதேவர் ஆலயம், அகரம்.
  15. இந்த வரிசையில் பதினைந்தாவதாக, கடம்பத்தூர் அருகில் உள்ள ராமன் கோயில் கிராமத்தில் உள்ள மிகப்பழைமையான அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 1 - ஆம் தேதி நடைபெறயிருக்கிறது.

இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள் 

  • இந்த ஊரில் கல்யாண ராமரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராமர் திருமேனி பஞ்சராம க்ஷேத்திரங்களில் ஒன்று. சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்க திருமேனி இராமபிரானால் வனவாசத்தின் போது பூஜிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இராமர் வழிபட்ட திருக்கோவில்  என்பதால் இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீராமலிங்கேஸ்வரர் என்று பெயர் வந்துள்ளது.
  • இந்த ஆலய திருப்பணி துவங்கப்பட்ட போது கட்டுமானத்திற்காக குழி எடுத்த போது ஒரு தாழியில் அமர்ந்த நிலையில் ஒரு சாதுவின் எலும்புக்கூட்டினை கண்டு உள்ளனர். கிராமவாசிகள் அதை அப்படியே இருந்த இடத்தில் புதைத்துவிட்டு அதன் மீது தற்போது கோவிலை கட்டி வருகின்றனர். இது ஒரு சித்த புருஷரின் ஜீவா சமாதியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த கோவிலுக்கு தேவ பிரசன்னம் பார்த்த போது இங்கு நவதுர்கைகளும் வாசம் செய்வதாக அறியப்படுகிறது. நவதுர்கையை வழிபட்ட மாபெரும் சித்தரின் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது. இந்த சித்தர் அஷ்டம சிட்திகளையும் பெற்றவர். பொதுவாக ஜீவா சமாதி அமைந்துள்ள ஆலயம் ஊருக்கு தென்மேற்கேஅமையப்பெறும். அவ்வாறே இந்த ஆலயமும் ஊருக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. இந்த தளத்தின் மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டால் துக்கம், கவலை, ஆபத்து, மனக்குழப்பம் ஆகியவை பறந்தோடும்.
  • இந்த ஆலயத்தில் உள்ள லிங்க திருமேனியில் 11 பட்டைகள் உள்ளன. இந்த லிங்கத்தின் 11 பட்டைகள் ஏகதச ருத்ரர்களாக கருதப்படுகிறது. 11 சிவ நாமங்களான மஹாதேவ ருத்ரன், சிவா ருத்ரன், ருத்ர ருத்ரன், சங்கர ருத்ரன், நீலலோஹித ருத்ரன், ஈசான ருத்ரன், விஜய ருத்ரன், பீம ருத்ரன், தேவ தேவ ருத்ரன், பவோத்பவ ருத்ரன் மற்றும் கபாலீச ருத்ரன்  என்ற 11 ருத்ரர்களை உள்ளடிக்கிய திருமேனியாகும்.


இந்த கோவிலை சுற்றி அகத்தியர் பூஜித்து பணித்ததின் பெயரில் அஷ்ட மா சித்திகள் தியானித்து வழிபட்ட லிங்கங்கள் 8 உள்ளன. இந்த லிங்கங்களை வழிபட்டால் அஷ்டமா சித்திகள் கிட்டும் என்று நம்பப் படுகின்றது. இந்த தகவல் தொன்மையான நூல்களிலிருந்து கிடைக்கப்பெற்றது/ அவை முறையே,
  1. அனிமா - ஒருவரின் உடல் அளவைக் குறைத்துக்கொள்ளும் திறன் - வெண்மணம் புதூர் - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
  2. மஹிமா - ஒருவரின் உடல் அளவை பெருக்கி கொள்ளும் திறன் - புதுமைவிலங்கை - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
  3. லஹிமா - ஒருவரின் எடையயை குறைத்துக்கொள்ளும் திறன் - அகரம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்(மஹாதேவர்)
  4. கரிமா - ஒருவரின் எடையினை அபரிவிதமான அளவுக்கு பெருக்கி கொள்ளுதல் - சத்தரை - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
  5. பிராப்தி - எதையும் சாதித்து பெரும் திறன் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ சோளீஸ்வரர்
  6. வாசித்துவம் - எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுதல் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ கைலாசநாதர்
  7. பிரகாம்யம் - வேண்டுவன யாவும் சிட்தி ஆக்கிக் கொள்ளுதல் - சிற்றம்பாக்கம் - ஸ்ரீ இஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
  8. ஈசத்துவம் - படைப்புத் தொழிலின் கண் ஆதிக்கம் - பேரம்பாக்கம் - ஸ்ரீ அஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
  9. அனைத்து அஷ்ட ம செய்திகள் வழிபட்ட தலம் - மணவூர் - கற்கடேஸ்வரர்

இத்தகைய சிறப்புகளும் சக்தியும் பெற்ற இத்திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் திரு. பட்டம் சிவஸ்ரீ ச. ஹாலாஸ்யநாத சிவாச்சாரியார், தலைமை அர்ச்சகர், அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் சுமார் 10 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு நடத்த இருக்கிறார்கள். சிவனுக்கு ஏக அக்னியாக  5 ஹோம குண்டத்துடன் 4 காலமாக யாகசாலை பூஜை நடைபெற உள்ளது.

ஆகவே, தாங்கள் இந்த கும்பாபிஷேகத்திற்க்கு பொருளுதவி செய்ய விரும்பினால் எங்கள் முகவரியில்/தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இறைவனை உணர இறைப்பணி அவசியம். அந்த இறைப் பணியை செய்ய ஆலயங்கள் கட்டாயம் அவசியம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த காஞ்சி மஹாப்பெரியவர் அவர்கள் புதிய ஆலயத்தினை அமைப்பதைவிட பழைய கோவில்களை புனரவர்தனம் செய்வது மிகவும் உசிதமாகும் என்று கூறியிள்ளார். எனவே இறைப்பணியில் விருப்பம் உள்ள அனைவரும் இந்த சிவாலயத் திருப்பணியில் அவசியம் பங்கு கொண்டு இறை அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



நமஸ்காரம் 🙏.

சிவாலய வழிபாடு  மன்றம் 
எஸ் . வரதராஜன்
97, கச்சேரி ரோடு,
F3, க்ரீன்விச் லக்ஷஸ் அபார்ட்மெண்ட்,
மயிலாப்பூர், சென்னை-600 004
தொடர்புக்கு - 24611244, 94449 17124
மின் அஞ்சல் - uco.svardu@gmail.com / sivalayamandram@gmail.com

No comments:

Post a Comment

Thank you for your message. We will review your comment and/or feedback and come back to you.